
நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் வந்த சிறந்த காதல் கதை. மன்னிக்கவும் காதல் விதை.
ஆரம்பம்முதல் முடிவுவரை காதல் வெள்ளத்தில் பார்வையாளர்களை மிதக்கவைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். நிஜத்தை திரையில் வண்ணம் தீட்டியிருக்கிறார் இயக்குனர்.
சிம்பு என்றாலே வம்புதான் என்று பொதுவான கருத்தொன்று நம்மிடையே விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவரும்வரை இருந்தது. சிம்புவை முழுமையாக மாற்றியிருக்கிறார் கௌதம்.
கொஞ்சம் விவரமாக பேசுவோம்.........
கதாநாயகி த்ரிஷாவின் வீட்டில் கீழ்மாடியில் வாடகைக்கு இருக்கும் சிம்பு குடும்பம், த்ரிஷாவின் குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது வசதியில் குறைந்தது. த்ரிஷா ஒரு மலையாள கிறிஸ்தவ பெண். திடிரென ஒருநாள் வீதியில் த்ரிஷாவை கண்ட சிம்பு மனதில் காதல் மலர்கிறது. இளைஞன் ஒருவனிடம் காதல் மலருபோது அவனுள் உருவாகும் மாற்றங்கள், அவன் படும் அவஸ்தைகள், ஒவ்வொன்றும் நிஜத்தின் நிழல்.
அவள் இதயத்திலும் காதல் உருவாகிறது ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காரணம் அவள் குடும்ப சூழல்,சிம்புவைவிட ஒரு வயது அதிகம். ஆனாலும் ஒருகட்டத்தில் த்ரிஷா தனக்குள்ளும் காதல் இருப்பதை சிம்புவிடம் தெரிவிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். நிஜத்தில் காதலர்கள் எங்கெல்லாம் செல்வார்களோ அங்கெல்லாம் இவர்களும் செல்கிறார்கள். காதல் வீட்டுக்கு தெரியவர பிரச்சனை ஆரம்பிக்கிறது. த்ரிஷா ஒதுங்க நினைக்கிறார். துரத்தும் சிம்புவின் நடிப்பு நிஜம். ஒரு உதாரணம்.... த்ரிஷாவின் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டு,த்ரிஷாவுக்கு தனது கையடக்க தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக அழைப்பெடுத்தாலும் த்ரிஷா அழைப்பை துண்டித்துகொண்டே இருக்க, அந்த கோபத்தில் கையிலிருந்த தொலைபேசியை நிலத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சிம்புவின் நடிப்பில் உண்மை மட்டுமே இருந்தது.
சர்வதேச விருதுகளை வென்றபின் ரஹ்மான் பணியாற்றிய முதல் தமிழ் திரைப்படம். அதிக கவனமெடுத்திருக்கிறார். இசையும் கதையும் ஒன்றரக்கலந்திருப்பது சிறப்பு. பாடல்களும் அருமை. ஏன் இதயம் உடைத்தாய் பாடல் சிம்புவின் இதயம் உடையும்முன்னே வந்துவிட்டது. த்ரிஷா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பில் ஜோதிகா தெரிகிறார். சிம்புவின் நண்பராக வருபவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவில் தெளிவு, படத்தொகுப்பில் அமைதி, இவையெல்லாம் மேலதிக பலம்.
இறுதியில் சினிமாவையும் நிஜத்தையும் வேறுபடுத்தி காண்பித்தது தனி அழகு.[சாதாரணமானவர்களுக்கும் புரியும்படியாக அமைத்திருக்கலாம்]
இறுதிக்காட்ச்சியை பார்க்கும்போது கவனம் சிதறினால், முடிவில் என்ன நடந்தது? சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்ற சந்தேகத்துடன்தான் வீடு திரும்ப நேரிடும்.
இல்லை இல்லை என்றாலும், கௌதம் மேனனின் உண்மைக்கதைதான் விண்ணைத்தாண்டி வருவாயா என்பது உண்மை.
"விண்ணைத்தாண்டி வருவாயா" பலரது வாழ்க்கை.........